சமூக வலைதளத்தில் இந்திக்கு முன்னுரிமை: மத்திய அரசின் உத்தரவுக்கு ஜெ. கடும் எதிர்ப்பு!!
சென்னை: சமூக வலைதளங்களில் இந்தியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சமூக வலைதளங்களில் அதிகாரிகள் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று இதற்கு கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மத்திய அரசோ, ஆட்சி மொழி என்பதாலேயே இந்திக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா கடிதம்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் "ட்விட்டர்", "பேஸ்புக்" போன்ற தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.
அதிலும், முதலில் இந்தியில் பதிவிட்ட பின்னர் ஆங்கிலத்தில் பதிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தை விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
சட்டப்படி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்பு மொழி ஆங்கிலமாகும். 1976-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி குறித்த சட்டப்படி, மத்திய அரசு அலுவலகலங்களில் இருந்து சி- பிராந்தியத்தில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அச்சட்டப்பிரிவில், இந்தி பேசாத மக்கள், இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சி- பிராந்தியத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் அனைத்து தொடர்பையும் ஆங்கிலத்தில் மேற்கொள்வது அவசியமாக இருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் தகவலை தெரிவிக்காவிட்டால் அது அவர்களுக்குச் சென்றடையாது.
அவ்வாறு இருக்கும்போது, உள்துறை அமைச்சகம் தொடர்பு மொழியாக இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியிருப்பது 1963-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத்திற்கே எதிரானதாகும்.
எனவே, அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சக உத்தரவில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ஆங்கிலத்தை பயன்படுத்த பிரதமர் வழிவகை செய்ய வேண்டும்.
தமிழை ஆட்சி மொழியாக்குக
இதேபோல், கடந்த 3-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் தொண்மை வாய்ந்த தமிழ் மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தேன்.
மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் அத்தனையையும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 8-ல் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.
இந்த கோரிக்கைளை நிறைவேற்றினாலே, சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications