சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெ. குறிவைக்கும் 'திரு' 'ஸ்ரீ' தொகுதிகள்...
சென்னை: கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டதைப் போல இந்த தேர்தலிலும் 'திரு' அல்லது ஸ்ரீ என்று தொடங்கும் தொகுதிகளில்தான் ஜெயலலிதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிடரின் ஆலோசனைப்படியே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் வாங்க என்று திமுக தலைவர் அழைப்பு விடுத்தாலும் காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும்தான் கோபாலபுரத்திற்கு சென்று கூட்டணியை உறுதி செய்துள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நலக்கூட்டணியாக மாறிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி தனி ஆவர்த்தனம் செய்கிறது.
பாஜகவோ புதிய அணி அமைக்க முயற்சி செய்கிறது. தேமுதிகவின் நிலையோ காஞ்சிபுரம் மாநாட்டில் கூட தெரியப் போவது இல்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே தெரியவரும். ஏனெனில் அத்தனை பக்கமும் பேசிக் கொண்டிருக்கிறது தேமுதிக. ஆளும் அதிமுக முகாமில் எந்த சலனமும் இல்லை என்றாலும் வேட்பாளர் தேர்வு, போட்டியிட உள்ள தொகுதிகள் என அமைதியாகவே தேர்தல் பணிகளை செய்து வருகிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தொகுதிகள்
2011ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போதும் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து எம்.எல்.ஏ பதவியை இழந்தார். வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை திரு, அல்லது ஸ்ரீ என்று தொடங்கும் தொகுதியில்தான் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
'திரு' தொகுதிகள்
தமிழகத்தில் 'திரு'என்று தொடங்கும் தொகுதிகளைப் பார்த்தால் திருத்தணி, திருவள்ளூர், திருவொற்றியூர், திரு.வி.க நகர், திருப்போரூர்
திருப்பத்தூர் (வேலூர்), திருவண்ணாமலை, திருக்கோயிலூர், திருச்செங்கோடு, திருப்பூர் வடக்கு , திருப்பூர் தெற்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், திருவிடைமருதூர், திருவையாறு, திருமயம், திருப்பத்தூர் (சிவகங்கை), திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி, திருவாடாணை, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.
'ஸ்ரீ' தொகுதிகள்
ஸ்ரீ என்று தொடங்கும் தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் குறிப்பாக திருத்தணி, திருவெற்றியூர், திருச்செந்தூர், திருப்போரூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் பரிசீலனையில் உள்ளதாம். அந்த கோவில்களில் சிறப்பு பூஜைகளும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதால். இதில் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர் தேர்வு
விருப்பமனு பெற்ற கையோடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வில் கவனம் செலுத்தி வரும் ஜெயலலிதா, கூட்டுத் தொகை 2 வரும் நாளாக பார்த்து வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், இப்போது அவரது ராசியான கூட்டுத் தொகை இரண்டாம். அதற்கு முன்னதாக ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரை தரிசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீரங்கம் வருகை
பிப்ரவரி 24ம் தேதி 68வது பிறந்தநாளன்று ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளதாகாவும், இதற்காக சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ள ஜெயலலிதா, தன் பிரச்சாரத்தை அவர் தொடங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்த தொகுதியில் போட்டி
அதே நேரத்தில் ஜெயலலிதா இம்முறையும் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படும் நிலையில் சென்னையை சுற்றியுள்ள 'திரு' தொகுதியை தேர்வு செய்வாரா? ஸ்ரீரங்கம் அல்லது தென் மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தொகுதியை தேர்வு செய்வாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
எத்தனை தொகுதிகளில் போட்டி
கடந்த முறை தேமுதிக, சமக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை யாருடன் கூட்டணி என்று இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனாலும் சிறு கட்சிகள் அதிமுகவின் அழைப்பிற்காக காத்திருக்கின்றன. இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு 34 சீட்களை மட்டும் ஒதுக்கிவிட்டு அதிமுக 200 போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 தொகுதிகள் என்பதற்குக் காரணமும் 2 கூட்டுத் தொகை தான் என்கிறார்கள்..