ஜெயலலிதா.. இன்றே கடைசி!... மறக்க முடியாத நவம்பர் 22, 2016 Flashback
ஜெயலலிதாவின் கையெழுத்துடன் கூடிய கடைசி அறிக்கை வெளியான நாள் இன்று.
Recommended Video
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கடைசியாக கடிதம் எழுதிய நாள் இன்று.
அதன்பின்னர் அவரது கையெழுத்தை மக்கள் காண முடியாமலேயே போய் விட்டது. மரணமடைந்த ஜெயலலிதாவைத்தான் மக்கள் கண்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுக்களுடன் ஜெயலலிதா பெருவிரல் ரேகை வைத்த படிவங்கள் கொடுக்கப்பட்டன.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அந்த அளவுக்கா ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. நவம்பர் 13ஆம் தேதி திடீரென ஜெயலலிதா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.
|
கையெழுத்து போடாத கடிதம்
அதில் 3 தொகுதி தேர்தல் தொடர்பாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயலலிதா, மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஊடகங்களுக்கு இந்த அறிக்கை முதலில் அனுப்பி வைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் இருந்தது. பின்னர் அதே அறிக்கை ஜெயலலிதாவின் கையெழுத்துடன் வெளியானது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கூட ஜெயலலிதாவின் கையெழுத்தில்லாத அறிக்கைதான் வெளியிடப்பட்டது.
மிகப்பெரிய போஸ்டர்கள்
ஜெயலலிதாவின் கடிதத்தை மட்டுமே மிகப்பெரிய போஸ்டர்களாக அச்சடித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.ஜெயலலிதாவின் கடிதத்தைப் பார்த்து உற்சாகமடைந்த அதிமுக தொண்டர்கள், வாக்குகளை வாரி வழங்கி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தனர்.
நன்றி கடிதம்
இந்த மாபெரும் வெற்றிக்கு நன்றி கூறி கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய கையெழுத்தை விட நல்ல மாற்றம் தெரிகிறது. அவரது கையெழுத்து மிகவும் தெளிவாக இருந்தது. அந்த அறிக்கைதான் ஜெயலலிதா கையெழுத்துடன் வெளியான கடைசி அறிக்கையாகும்.
என்னதான் நடந்தது அப்பல்லோவில்
இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா உயிரோடு இருப்பதாக நாடகம் நடத்தினார்களா? அந்த கையெழுத்தும், கைரேகையும் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போடப்பட்டதுதான் என்பது பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்தின் முதற்கட்ட விசாரணையும் இன்று தொடங்குகிறது.