கையை வெட்டனுமா? மாம்பழத்தை தடைசெய்யனுமா? சைக்கிள் ஓட்டக்கூடாதா?:ஸ்டாலினுக்கு ஜெ. கேள்வி
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டுமெனில் கை சின்னத்துக்காக கையை வெட்ட வேண்டுமா? மாம்பழம் சின்னம் என்பதற்காக அதை தடை செய்ய வேண்டுமா? சைக்கிளை ஓட்ட தடை விதிக்க வேண்டுமா? என்று திமுகவுக்கு முதல்வர் ஜெயலலிதா சராமரி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஜெயலலிதா நேற்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து சிதம்பரம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
கருணாநிதி தமது மகன் ஸ்டாலின் மூலம் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் உள்ளதோ, அவற்றையெல்லாமல் மறைக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம் கையை அனைவரும் வெட்டிவிட வேண்டும் என்றும், கையுறைகளை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என மனு கொடுப்பாரா ஸ்டாலின்?
காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்...
சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என மனு கொடுப்பாரா? ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் உள்ளது. எனவே மாம்பழம் விற்பனையை தடை செய்ய வேண்டும் என மனு கொடுப்பாரா?.
இதுபோன்றுதான் இரட்டை இலை சின்னமும். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது பழமொழி, இதைப்போல் அதிமுகவை கண்டு அஞ்சும் திமுகவினருக்கு எதை பார்த்தாலும் இரட்டைஇலை போல் தெரிகிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய தேர்தல். நம்முடைய துயரங்களை தீர்க்க வகை செய்யும் தேர்தல். இந்திய நாடு பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
தற்போது உள்ள மத்தியில் உள்ள மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, மக்கள் நலம் காக்கும் அதிமுக ஆட்சியை நிலைநாட்டுங்கள். இந்த தேர்தல் மூலம் இந்திய நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதன் மூலம் மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது, அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், நலன்கள் பாதுகாக்கப்படும், தமிழ்நாடு மக்களின் வாழ்வு வளம் பெரும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.