ஜெ., கைரேகை வழக்கு - டாக்டர் பாலாஜி பதிலை வெளியிட ஹைகோர்ட் தடை
ஜெ. கைரேகை சர்ச்சை வழக்கில் டாக்டர் பாலாஜியிடம் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், அவர் அளித்த பதில்களை ஊடகங்களை வெளியிடக்கூடாது என்று நீதிபதி தடை விதித்துள்ளார்.
சென்னை: வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் விளக்கம் தருவதாக டாக்டர் பாலாஜி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
டாக்டர் பாலாஜியிடம் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், அவர் அளித்த பதில்களை ஊடகங்களை வெளியிடக்கூடாது என்று நீதிபதி தடை விதித்துள்ளார்.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார்.
ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி
இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலராகப் பணியாற்றிய ஜீவா சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் ஆஜராகியுள்ளார். கடந்த 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளரான வில்ஃபிரட் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மருத்துவச் சான்றிதழ்கள்
வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கலாம் என்று அவைத் தலைவர் மதுசூதனன் கொடுத்த கடிதத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டீர்கள்? அந்தக் கடிதத்தில் ஜெயலலிதாவின் மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருந்ததா?' என்பன உள்ளிட்ட கேள்விகளை திமுக வேட்பாளர் சரவணன் தரப்பு வழக்கறிஞர்
மதுசூதனன் ஒப்புதல் அளித்துள்ளார்
நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஏற்றுக்கொண்டோம் மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே ஜெயலலிதாவின் கைரேகைப் பதிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்ஃப்ரெட் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் பாலாஜியிடம் விசாரணை
இந்நிலையில் முதன்முறையாக டெல்லியில் இருந்து வந்து முதன்மைச் செயலர் ஒருவர் இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே அப்பல்லோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை யாருமே பார்க்க முடியாத போது அவரைப் பார்த்து அவரிடம் கைரேகை பெற்று அதற்குச் சான்றாவணம் அளித்த டாக்டர் பாலாஜியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் மீண்டும் ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
அடுத்த கட்ட விசாரணையின் போது
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி ஆஜராக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையான அக்டோபர் 27ம் தேதியன்று மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பாலாஜியின் வாக்கு மூலம்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கைரேகை பெற்ற டாக்டர் பாலாஜி இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக இன்று ஆஜரானார். அவரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி வேல்முருகன் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். பாலாஜியிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவர் அளித்த பதில்களையும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டார். நவம்பர் 3ஆம் தேதி டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜராகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா கைரேகை சர்ச்சை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.