கன மழை எச்சரிக்கை: சேத தடுப்பு நடவடிக்கைக்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை களமிறக்கினார் முதல்வர்!
சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை இலாகா அறிவித்த சில நிமிடங்களிலேயே, கூடுதலாக 10 ஐஏஎஸ் அதிகாரிகளை, பல்வேறு மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களாக நியமித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுகொண்டு, வடதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும் மழையை பெய்விக்கும் என்று வானிலை இலாகா இன்று பகல் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஒரு உத்தரவு வெளியானது. அதன்படி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா.
இந்த அதிகாரிகள் மேற்பார்வையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகளுடன் இந்த அதிகாரிகளும் இணைந்து, ஒருங்கிணைந்து, சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும், அவ்வாறு ஏற்பட்டாலும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உத்தரவு.
இதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு சபீதா, விழுப்புரம்-உதய சந்திரன், நாகப்பட்டினம்-சிவ்தாஸ் மீனா, ராமநாதபுரம்-விஜயகுமார், திருவாரூர் மற்றும் தஞ்சை-சத்ய கோபால், புதுக்கோட்டை-சமயமூர்த்தி, தூத்துக்குடி-குமார் ஜெயந்த், திருநெல்வேலி-செந்தில்குமார், கன்னியாகுமரி-அதுல் ஆனந்த், கடலூர்-ககன்தீப் பேடி, காஞ்சிபுரம்-பிரபாகர், திருவண்ணாமலை-பிரதீப் , திருவள்ளூர்-பிரபாகர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி-ராஜேஸ் லக்கானி, காஞ்சீபுரம்-ராஜாராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமைச்சர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை மற்றும் சேத தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications