சட்டசபையில் எப்படி பேசனும் தெரியுமா? திமுகவின் தங்கம் தென்னரசுக்கு ஆலோசனை சொன்ன ஜெ.,
சென்னை: அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் குறுக்கீடுகளை தவிர்க்கவும், தி.மு.க. எம்.எல்.ஏ எப்படி பேச்சை முடிக்கவேண்டும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை கூறினார்.
சட்டசபையில் நேற்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளித்தனர்.
உரையை விரைவாக முடிக்கும்படி தங்கம் தென்னரசை சபாநாயகர் அறிவுறுத்தினார். இன்னும் ஒரு சில நிமிடங்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு கேட்டார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, தங்கம்தென்னரசு அவர்களுக்கு தங்கள் வாயிலாக, நட்பு ரீதியாக ஒரு ஆலோசனையைக் கூற விரும்புகிறேன். தாங்கள் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு இதற்கு அமைச்சர் பதிலளிப்பாரா? இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று ஒரு கேள்வியுடன் முடிக்கும்போது, அமைச்சர் எழுந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகவே, வினாவோடு முடிக்காமல், வேறு விதமாக முடித்தீர்கள் என்றால் குறுக்கீடுகளை ஓரளவிற்கு தவிர்க்கலாம் என்று புன்னகையுடன் கூறிவிட்டு அமர்ந்தார்.