அம்மாவை விடு, கடைய தொடு: மதுரை ர.ரக்கள் கொதிப்பால் மைசூர் சில்க்ஸ் திறப்பு விழா கேன்சல்
மதுரை: அம்மா கர்நாடக சிறையில் இருக்கும்போது மைசூர் சில்க்ஸ் புடவை கடையை திறப்பதா என்று மதுரையில் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கியதால் கலெக்டர் கலந்துகொள்ள வேண்டிய விழாவே கேன்சல் ஆகியுள்ளது.
கர்நாடக அரசின் கழகங்களில் ஒன்று, 'கர்நாடக சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்பொரேசன் லிமிட்டெட்' . எளிமையாக மைசூர் சில்க்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், நாட்டின் பல இடங்களிலும் மைசூர் சில்க்ஸ் தனது புதிய கிளைகளை தொடங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 9ம் தேதி மதுரை கே.கே.நகரில் மைசூர் சில்க்ஸ் கிளை திறக்கப்படுவதாகவும், மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியம் கடையை திறந்து வைக்க உள்ளதாகவும் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. மேலும், கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி நீலா மஞ்சுநாத்தும் அதில் பங்கேற்பதாக இருந்தது.
இந்த தகவல் மதுரை மாவட்டத்து ரத்தத்தின் ரத்தங்களுக்கு பரவியதும் கடுமையாக கொந்தளித்தனர். கர்நாடகாவில் அம்மாவை சிறை வைத்துக்கொண்டு நம்ம ஊரில் வந்து கடையை திறக்கிறார்கள். அதையும் நமது கலெக்டர் திறந்து வைக்கிறார் என்றால் இது என்ன அநியாயம்? என்று தொண்டர்கள் தொடை தட்டினர்.
கட்சியின் உள்ளூர் பிரபலமான அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இந்த தகவலை கொண்டு சென்றுள்ளனர். அவரும் கலெக்டரிடம் தொண்டர்களின் குமுறலை கூறியுள்ளார். இந்த தகவல் மைசூர் சில்க்ஸ் நிர்வாகிகளுக்கு சென்றது.
மைசூர் சில்க்ஸ் நிர்வாகிகள் மயக்கம் வராத குறையாம். இருந்தாலும், ஜெயலலிதா எப்போது தமிழகம் வருகிறாரோ அப்போது நாங்கள் கடையை திறந்துகொள்கிறோம் என்று கூறிவிட்டனராம். இதனால் விழா கேன்சல் ஆகிவிட்டது.












Click it and Unblock the Notifications