சென்னையில் காற்று மாசு எவ்வளவு? கண்காணிக்க வந்தாச்சு நடமாடும் வாகனம்
சென்னை: சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தியாவில் அதிக மக்கள் நெருக்கமும், வாகன அடர்த்தியும் உள்ள நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் இருக்கிறது. ஒரு நாளைக்கு சுமாராக 600 முதல் 800 வாகனங்கள் வரை சென்னையில் புதிதாக பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் இயக்கப்படுவதன் மூலமாக வெளியேறும் புகையை விட, தனி நபர்களால் எரிக்கப்படும் குப்பைகளாலே அதிக அளவில் காற்று மாசுபடுவதாக தெரிவிக்கின்றனர் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்னையில் அதிக மக்கள் கூடும் பகுதிகள், போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களான தியாகராய நகர், அடையாறு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் காற்றில் ஏற்படும் மாசின் அளவை நாள்தோறும் கணக்கிடுகிறது. இதன் மூலம் காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் காற்றில் உள்ள தூசிகள் குறித்து அளவிடுகிறது.
தூசிகளால் ஏற்படும் மாசு
இதில் குறிப்பாக நச்சு வாயுக்களால் ஏற்படும் மாசின் அளவை விட தூசிகளால் ஏற்படும் மாசின் அளவே அதிகமாக இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீடுகள் தெரிவிக்கின்றன. காற்றில் ஏற்படும் மாசுகள் வயதானவர்களையும், குழந்தைகளையும் பெரிதும் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
நடமாடும் வாகனம்
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காற்று மாசு எவ்வளவு
இந்த நடமாடும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் மூலம் சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, அமோனியா, ஒசோன், கார்பன் மோனாக்சைடு, பென்சீன் போன்ற வாயுக்களின் அளவையும் மற்றும் காற்றில் கலந்துள்ள 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள நுண் துகள்களையும் கண்டறியலாம்.
காற்றின் தரம் ஆய்வு
தீபாவளி, போகி போன்ற பண்டிகை நாட்களில், காற்றின் தன்மையினை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், விபத்துகள், புகார்கள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றிற்கு அந்தந்த குறிப்பிட்ட இடத்திலேயே காற்றின் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் வகையிலும் இந்த நடமாடும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் புகார்கள்
மேலும், சுற்றுச்சூழல் குறித்த புகார்களை பொதுமக்கள் இணைய வழி மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்கவும், புகார் மீது நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு இணைய தளம் மூலம் தகவல்அனுப்பிடும் வகையிலும், 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்; தொழிற்சாலைகள், தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியை பெறும் விண்ணப்பங்களை இணைய தளம் வாயிலாக சமர்ப்பித்து, அதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பரிசீலனை செய்து, அனுமதியையும், இணையம் மூலமாகவே வழங்குவதற்கு ஏதுவாக 5 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மென் பொருள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.