சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாக திறந்தது ஏன்? தினகரன் விளக்கம்!
ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்திலேயே ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாக திறந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்திலேயே ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாக திறந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் இன்று திறக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு ஜெயலலிதாவின் படத்தை திறந்திருக்கிறது.
ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது.
அமைதி வளம் வளர்ச்சி
இந்தப் படம் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்டது. உருவப்படத்தின் கீழே ஜெயலலிதாவின் தாரக மந்திரங்களான அமைதி, வளம், வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
புறக்கணித்த தினகரன்
ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரனும் இந்த விழாவை புறக்கணித்தார்.
அவசர கதியில் ஏன்?
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அவசர கதியில் ஜெயலலிதாவின் படத்தை திறந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் பெரிய தலைவரான ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா கட்சி விழா போல் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
ஜெ.பிறந்தநாளில்..
ரிப்பன் கட்டடத்தில் மேயர் படத்தை திறப்பது ஜெயலலிதாவின் படத்தை திறந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பெரிய பெரிய தலைவர்களை அழைத்து சிறப்பாக அவரது படத்தை திறந்திருக்கலாம் என்றும் தினகரன் கூறினார்.
ஆட்சிக்கு ஆபத்து வரும்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எதிராக தீர்ப்பு வரும் என்றும் இதனால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என எண்ணியே அவசர கதியில் ஜெயலலிதாவின் படத்தை திறந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் கட்சி கவுன்சிலர் விழா போல் ஜெயலலிதா விழாவை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.