விடாது பச்சை + புதன்ஓரை .. ஜெயலலிதாவின் லேட்டஸ்ட் செண்டிமெண்ட்!
சென்னை: இன்றைய அரசியல் தலைவர்களில் ராசி செண்டிமெண்ட் பார்ப்பதில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிகர் எவரும் இருக்க மாட்டார்கள். நல்ல நாள், நல்ல நேரம் ஏன் போகும் ஓரையும் நல்லதாக இருக்கவேண்டும் என்பதில் கரெக்டாக கவனிப்பார்.
ஜெயலலிதாவிற்கு இப்போது ஒர்க் அவுட் ஆகும் ஓரை புதன் என்று ஜோதிடர்கள் கூறியிருப்பார்கள் போல எனவே தொடர்ந்து எந்த காரியம் செய்தாலும் புதன் ஓரையில்தான் செய்கிறார்.
புதன் ஓரையில் கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும் என்பது நம்பிக்கை.
ஜெயலலிதா நம்பிக்கை
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கு முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று இதே போல ஒரு புதன் ஓரையில்தான் ஆளுநரை சந்தித்தார். அவர் வீட்டை விட்டு கிளம்பிய நேரம் சுக்கிர ஓரை என்றாலும் சந்தித்த நேரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதன் ஓரையில்தான்.
நல்லநேரம் வந்துருச்சா
அதேபோல மே 23ம் தேதி 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்றதும் புதன் ஓரையில்தான். அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ய போயஸ் கார்டனில் இருந்து மதியம் 1.30 மணிக்கு சுக்கிர ஓரையில் தண்டையார்பேட்டைக்கு கிளம்பினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக, மெரினா கடற்கரை சாலை, வரதராஜ பெருமாள் கோவில் சாலை வழியாக தண்டையார் பேட்டை சென்ற அவருக்கு வழி நெடுக மக்கள் வரவேற்பு அளித்தனர்.
மேளதாளம் முழங்க வரவேற்பு
வேட்புமனு தாக்கல் செய்ய பச்சை நிற புடவை அணிந்து ( பச்சை புத பகவானுக்கு ஏற்ற வண்ணம்) வந்த முதல்வர் ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமை கழக நிர்வாகிகள் மேளதாளம் முழங்க வரவேற்றனர்.
புதன் ஓரையில் தாக்கல்
மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா 2 மணி அளவில் தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ் பாபு எம்.பி., சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.
முழங்கிய மக்கள்
ஜெயலலிதாவை பார்த்ததும் கூடி இருந்த மக்கள் ‘அம்மா வாழ்க', ‘புரட்சித் தலைவி வாழ்க' என்று முழக்கமிட்டனர். அவர்களைப் பார்த்து ஜெயலலிதா புன்சிரிப்புடன் வணக்கம் தெரிவித்தார். பின்னர் காரில் புறப்பட்டு அதே பாதையில் போயஸ்கார்டன் சென்றார். ஆக அம்மாவின் புதன் ஓரை செண்டிமெண்ட் இனி அனைத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.