ஜெ.வின் கொடநாடு பங்களாவை வீடியோ எடுத்த மர்ம நபரால் பரபரப்பு- போலீஸ் 'வலை'
ஜெயலலிதாவின் கொடுநாடு எஸ்டேட் பங்களாவை மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவை வீடியோ எடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவை சுற்றி கடந்த சில வாரங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. அந்த பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவரை கடந்த ஏபரல் 24ஆம் தேதி சிலர் தாக்கி கொலை செய்தனர். கிருஷ்ண பகதூர் என்கிற மற்றொரு காவலாளியை தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தக் கொலையை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், ஜெ.யின் முன்னாள் கார் ஓட்டுநர். இவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
சயான்
அவருடைய கூட்டாளியான சயான் விபத்தில் சிக்கி, கோவை தனியார் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.
குட்டி
அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய மற்றொரு கூடாளியான குட்டி தலைமறைவாகியுள்ளார். அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஐடி ரெய்டு வதந்தி
இந்நிலையில் நேற்று கொடநாடு பங்களாவில் வரிமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர் என தகவல் வந்தது. ஆனால் அங்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்களாவைச் சுற்றிப் பார்க்க வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பி சென்றனர். எனவே வருமான வரித்துறை சோதனை என்பது வதந்தி என தகவல் வெளியானது. இப்படி அந்த பங்களாவைச் சுற்றி சில நாட்களாக நடப்பவை திகில்படங்களாகவே இருக்கின்றன.
வீடியோ எடுத்த மர்ம நபர்
இந்நிலையில் கொடநாடு பங்களாவை ஒரு மர்மநபர் ஒருவர் வீடியோ படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதையடுத்து போலீசார் வீடியோ எடுத்தவரை தேடி வருகின்றனர். கொடநாடு பங்களாவில் எங்கு, என்ன பொருட்கள் ஆவணங்கள் இருக்கின்றன என்பது மறைந்த ஜெயலலிதாவுக்கும் சிறையில் இருக்கும்சசிகலாவுக்கும் மட்டுமே தெரியும் என்கிற நிலையில் கொடநாடு பங்களாவை சுற்றி ஏன் இத்தனை மர்மங்களும் சர்ச்சைகளும் நடக்கின்றன என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.