அப்பல்லோ ஐசியுவில் இருந்து 58 நாட்களுக்குப் பின் தனி அறைக்கு மாறிய ஜெ., - உற்சாக மூடில் தொண்டர்கள்
முதல்வர் ஜெயலலிதா 58 நாட்கள் கிரிட்டிக்கல் கேர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனி அறைக்கு மாற்றப்பட்டதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு 10 மணிக்கு அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்றுதான் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கை தகவல் தெரிவித்தது. நாளாக நாளாக நோய் தொற்று, நுரையீரல் பிரச்சினை, பிசியோதெரபி என்றெல்லாம் அறிக்கைகள் வெளியாக அதிமுக தொண்டர்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயலலிதா போயஸ்கார்டன் திரும்புவார் என்று தகவல்கள் கசிந்த நிலையில், வதந்திகள் வேகமாக பரவவே பலர் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ். ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகளும், யாகங்களும் நடத்தப்பட்டன. அப்பல்லோவில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 58 நாட்களாகிவிட்டது. ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி வரும் நிலையில் அவர் போயஸ் கார்டன் திரும்பலாம் என்றும், இல்லை இல்லை இன்று மாலை சிறப்பு அறைக்கு மாற்றப்படலாம் என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் நல்ல நேரம் பார்த்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெயலலிதா ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அப்பல்லோ வாசலில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா என்று அதிமுகவினர் முழக்கமிட்டனர்.