காவிரி மேலாண்மை வாரியம்... ஆளுநர் பதவி காலம் 5 ஆண்டு : டெல்லியில் ஜெ., உரை வாசித்த ஒபிஎஸ்
டெல்லி: மத்திய அரசு மருத்துவ கல்விக்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்திருப்பது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்விக்கொள்கைக்கு எதிரானது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து மாநில முதல்வர்கள் அல்லது பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள், வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் இதில் விவாதிக்கப்பட இருக்கின்றன.
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அந்த உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
•வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும்.
•அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாறி வரும் காலம் இது. மாநிலக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.
•மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கோஆப்ரேடிவ் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. அந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
•நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் சரிசமமாக பங்குதாரர்கள் என்ற கருத்தை நான் எப்போதும் வரவேற்கிறேன். வலிமையான மாநில அரசுகளால் தான் வலிமையான மத்திய அரசு அமையும் என பலமாக நம்புகிறேன்.
•மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. மிகவும் பின்தங்கியோர் மற்றும் கிராமப்புற பகுதி மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது.
•தற்போது மத்திய அரசு மருத்துவ கல்விக்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்திருப்பது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்விக்கொள்கைக்கு எதிரானது.
•மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் குறிப்பிடத்தக்க அளவை தாண்டியுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு பொருளாதார உதவி, சிறப்பு ஒதுக்கீடு போன்றவை தமிழ் மீடியத்தில் உயர்கல்வி பயில்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
•நீதிபதி எம்.எம்.புன்சி கமிஷன் 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அது தனது இறுதி அறிக்கையை 2010-ம் ஆண்டு வழங்கியது. அதில் மாநில அரசுகளுக்கு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
• காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
•மாநில முதல்வர் கூட்டம் வெறும் சம்பிர தாயமாக இருக்க கூடாது. மாநிலங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
•மாநில ஆளுநர்களை ஜனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றக்கூடாது. ஆளுநரின் பதவி காலம் 5 ஆண்டு என நிர்ணயம் செய்ய வேண்டும்.
என்று முதல்வர் ஜெயலலிதா உரையில் கூறப்பட்டுள்ளது.
TN Finance Minister O. Panneerselvam read out speech of Amma at the Inter -State Council meeting in Delhi today. pic.twitter.com/pZIVZ6MDDd
— AIADMK (@AIADMKOfficial) July 16, 2016