திராவிடத்தின் அங்கமான தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டுத் திருநாளாம் யுகாதி!: விஜய்காந்த்
தெலுங்கு, கன்னட மக்களின் புது வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்த்து
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், 'ஒற்றுமை, நல்லுணர்வு மேலும் வலுப்பெற வாழ்த்துக்கள். வளம் கொழிக்கும், நலம் தழைக்கும் ஆண்டாக மலர வாழ்த்துகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "புத்தாண்டு என்றாலே அனைவரும் புதிய துவக்கத்தை எதிர்நோக்கும் திருநாளாகும். திராவிடத்தின் அங்கமான தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டுத் திருநாளாம் யுகாதி பண்டிகை.
அம்மொழி பேசும் மக்கள் அனைவரும் மிக்க மகிழ்வுடனும், புதிய எழுச்சியுடனும் அத்திருநாளை கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் 21.03.2015- ஆம் தேதி, சனிக்கிழமை தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் யுகாதி எனும் புத்தாண்டு துவங்குகிறது.
இந்த புத்தாண்டில் மக்கள் எல்லா நலன்களும், அனைத்து வளங்களும் பெற்று அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், சீரும் சிறப்புமாக வாழ்ந்திட வேண்டுமென எனது இதயமார்ந்த யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் ஆஸ்தானம்
யுகாதிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
கோவிலில் உள்ள தங்க வாசல் அருகே ஏழுமலையான் முன்பு ஆஸ்தான சித்தர் புதிய வருடமான மன்மத நாம வருடத்தின் பஞ்சாங்கத்தை படிப்பார்.
புத்தாண்டின் நாள், திதி, கிழமை, 27 நட்சத்திரங்களின் ஜாதக பலன்கள் நாட்டின் வளர்ச்சி போன்றவை பஞ்சாங்கத்தில் உள்ள குறிப்புகளை வைத்து படிப்பார்கள்.
யுகாதி பண்டிகையை யொட்டி ஏழுமலையான் கோவிலில் காலை நடக்கும் வசந்த உற்சவம், ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் போன்ற கட்டண சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன