தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை மறைக்கவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு: ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை மறைக்கவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மூடி மறைக்கவே சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ இத்தனை நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றபோது பேசிய ஆடியோ நேற்று அவரது மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், இது தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா ஆடியோ
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியதாக தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுத் தள்ளி, படுகொலை செய்திருக்கிறார்கள். அதனால் மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது கலையும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது. இத்தனை மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆடியோவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் கபட நாடகம்
டான்சி வழக்கில் ஆதரவாக செயல்பட்ட நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, தூத்துக்குடி சம்பவத்தை முழுமையாக மூடி மறைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த விசாரணை கமிஷனை அமைத்து இருக்கிறார்கள். இதில் முழுக்க முழுக்க அரசு மீது இருக்கும் தவறு வெளிவந்துவிடக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. அதற்காகவே இந்த கபட நாடகத்தை அரசு அரங்கேற்றியிருக்கிறது.
மோடியின் பாரபட்சம்
தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது. இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து 4 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரதமர் பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருப்பதுதான் அவரது சாதனை. இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்னும் கேள்விக்குக்கூட நியாயமான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட காவலர்களைக்கூட பண்நீக்கம் செய்யாமல், வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.
திமுக கூட்டம்
மாவட்ட ஆட்சியர் சொல்லி இருப்பது எங்களுக்குத் தேவை இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் . திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், சட்டசபைக்கூட்டம் குறித்தும் 28ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.