சென்னையில் பயணத்தை தொடங்கியது மெட்ரோ ரயில்.. வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்த ஜெ.!
சென்னை: சென்னையின் புதிய சரித்திரமாக, சென்னைவாசிகளின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு வழித்தடம் என மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பால பாதையிலும் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காக கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒருசில காரணங்களுக்காக அரசு தொடக்க விழாவை தாமதப்படுத்தியது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானதால் எந்த நேரத்திலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இம்மாத தொடக்கத்திலேயே திறப்பு விழா நடத்தப்படும் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக இது தள்ளிபோனது.
இந்நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கோயம்பேடு, சிஎம்பிடி, அருகம்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சிஎம்ஆர்எல் பணிமனை ஆகியவற்றையும் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார்.
இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் நகரும் படிகட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம். நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
எல்லாமே வீடியோ கான்பரன்ஸ்
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அனைத்தையும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே இயக்கி வைத்து வருகிறார். ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட போதும் கூட தமது கால் தரையில் படாத வகையில்தான் பிரசாரத்துக்கு தலையை காட்டினார் ஜெயலலிதா. தற்போது சென்னையின் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவையும் கூட வீடியோ கான்பரன்ஸ் மூலமே ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறாரே... என்பது சென்னைவாசிகளின் ஆதங்கம்.