ஜெயலலிதா அட்மிட்... கண்காணிப்பு வளையத்தில் செல்போன் அழைப்புகள்
சென்னை : அப்பல்லோ போய் விட்டு வந்தாலே அம்மா எப்படி இருக்காங்க என்ற கேள்விதான் கேட்கப்படுகிறது. எனவேதான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வந்து செல்வதால் மருத்துவமனைக்கு அருகில் உள்ள செல்போன் டவர்களுக்கு வரும் அழைப்புகளையும், அவுட்கோயிங் கால்களையும், காவல்துறையினர் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்து விட்டது. ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதா, இல்லையா என்பது தொடர்பான எந்த முடிவுகளுக்கும் வர முடியவில்லை.
செல்போன்களுக்கு தடை
ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை டாக்டர்கள், நர்சுகள் யாராவது அறியாமல் கூட போட்டோ எடுத்து அது லீக் ஆகிவிடக்கூடாது என்பதால் பணியாளர்கள் அனைவருமே செல்போனை ரிசப்ஷனில் வைத்துவிட்டுச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தலைமைச் செயலகம்
சிகிச்சை பெறுகிறவர் முதல்வர் என்பதால் அப்பல்லோ மருத்துவமனை தலைமைச் செயலகம் போல செயல்படுகிறது. அமைச்சர்கள் அனைவரும் காலையிலேயே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர். மாலைதான் திரும்புகிறார்கள்.
காவல்துறையினர் கட்டுப்பாடு
அரசு நிர்வாகம் அப்பல்லோவை மையமாக வைத்து செயல்படத் தொடங்கி விட்டதால் காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் அப்பல்லோவில் இயங்குவதாக வெளிப்படையாக சொல்கிறார்கள். முதல்வரை பார்க்க முக்கிய வி.ஐ.பி.களும், வி.வி.ஐ.பி.களும் வந்துவிட்டு போகிறார்கள்.
செல்போன் டவர்கள் கண்காணிப்பு
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் வந்து செல்லும் இடமாக அப்பல்லோ மருத்துவமனை மாறியிருப்பதால், அப்பல்லோ அருகில் உள்ள செல்போன் டவர்களுக்கு வரும் அழைப்புகளையும், அவுட்கோயிங் கால்களையும், காவல்துறையினர் கண்காணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகசியம் காக்கும் விஐபிக்கள்
விவரம் தெரிந்த அதிகாரிகள் யாரும் போன் கால் வந்தால் பேசாமல் தவிர்த்து விடுகிறார்கள். விவரம் தெரியாதவர்கள்தான் முதல்வரின் உடல்நிலை பற்றிய கேள்விகளுக்கு உளறி விடுகிறார்களாம். ஆனால், இந்த விவரம் தெரிந்த கட்சியினர் தங்களுக்கு வேண்டிய பிரமுகர்களுக்கு இந்த தகவலைச் சொல்லி அப்பல்லோ அருகில் இருந்து செல்போன் பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள்.
இன்னும் என்னென்ன கட்டுப்பாடுகள் வரப்போகிறதோ?