ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைதான 5 பேருக்கு ஜாமீன்
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டஐ.ஐ.டி மாணவர் சதீஷ்குமார் உட்பட 5 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஐ.டி மாணவர் சதீஷ்குமார் உட்பட 5 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி மாலா உத்தரவிட்டார்.
உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இது தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையும் தொடர்ந்து வதந்தி பரவியது.
இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை, துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் போலீசார் 43 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து வதந்தி பரப்பிய நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையைச் சேர்ந்த மாடசாமி ஆகியோர் கடந்த அக்டோபர் 10ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர், திருமணி செல்வம், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். மேலும் கோவையில் புனிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கனரா வங்கி ஊழியர்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து முகநூலில் வதந்தி பரப்பியதாக கைதான தூத்துக்குடியை சேர்ந்த சகாயம் மற்றும் பாலசுந்தரம், அந்தோணிஜேசுராஜ், சதீஷ், மாடசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.