மே 22-ல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்- மே 23-ல் ஜெ பதவியேற்பு?
சென்னை: சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் மே 23-ந் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கக் கூடும் என கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த 11-ந் தேதியன்று தீர்ப்பளித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக உடனே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தீர்ப்பு வந்து 4 நாட்களாகியும் ஜெயலலிதா தொண்டர்களையோ பத்திரிகையாளர்களையோ சந்திக்கவில்லை. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுநர்களுடன் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வந்தார்.
மேலும் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் "இன்று நடைபெறும்.. நாளை நடைபெறும்" என கடந்த 4 நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், வரும் 22-ந் தேதி சென்னையில் கட்சி தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 7 மணிக்கு நடைபெறும்; இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறமால் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருருந்தார்.
22-ந் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுப்பார்; அப்போது சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதமும் ஆளுநரிடம் கொடுக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். இந்த கூட்டம் மற்றும் சந்திப்புகளுக்கு மறுநாள் மே 23-ந் தேதியன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.