தமிழக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடுவேன்: ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா
திருச்சி: தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் வென்றெடுக்க பாடுபடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசுவிழாவில் பங்கேற்றார். அங்கு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் தங்கும் வகையில் பஞ்சக்கரையில் ரூ.43 கோடி மதிப்பில் 1000 பக்தர்கள் தங்கும் வகையில் ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் எனும் தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கம்பரசம்பேட்டை காவிரியாற்றில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையையும், நவல்பட்டில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு தோட்டக்கலைத்துறை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய கட்டடம், 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருவானைகாவலில் அமைக்கப்பட்டுள்ள 110 துணை மின்நிலையம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அன்னதானக் கூடம், சிங்கப்பெருமாள் கோயிலில் சுற்றுலா பொருள் விளக்க மையம் மற்றும் அவைக்கூடம், ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகம், பூங்குடி, எட்டரை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடங்கள், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 423 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழக மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அயராது பாடுபடுவேன். மூன்றாண்டு கால ஆட்சிக்கான நற்சான்றுதான் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்றது.
காவிரி பிரச்சினை
காவிரி நதிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டுவிடும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்தப்படும். கண்காணிப்புக் குழு அமைந்ததும் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்த
விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி
மன்னரைக் காண இரண்டு புலவர்கள் சென்றிருந்தனர். ஒருபுலவரை அழைத்து, உங்களோடு வந்த புலவரைப் பற்றி சொல்லுங்களேன் என்று கூறினார். அதற்கு அந்த புலவரோ, அவர் ஒரு முட்டாள், எருமை, என்று கூறினார். அப்படியா புலவரே நாளைக் காலை வாருங்கள் என்றார் மன்னர்.
மற்றொரு புலவரை அழைத்து உங்களோடு வந்த புலவர் எப்படி என்று கேட்டார். அதற்கு அவரோ, அந்த புலவர் ஒரு மடையன், கழுதை என்று கூறினார். உடனே மன்னர், சரி புலவரே நாளை காலை அரசவைக்கு வாருங்கள் என்று கூறினார்.
உங்களுக்கு இடமில்லை
அரசவையில் இருவரையும் அழைத்த மன்னர், நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எருமை என்றும், கழுதை என்றும் கூறினீர்கள். உங்களுக்கு என்னால் பரிசளிக்க முடியாது. மனிதர்களுக்கு மட்டுமே என்னால் பரிசளிக்க முடியும் என்று கூறி வெறும் கையுடன் அனுப்பிவைத்தார்.
லோக்சபா தேர்தலில்…
அதேபோல நடைபெற்ற லோக்சபா தேர்தலில் புறங்கூறித் திரிந்தவர்களை புறந்தள்ளிவிட்டு எனக்கு பெருவாரியான வெற்றியை பரிசாக அளித்தீர்கள் உங்களுக்கு நன்றி என்று கூறினார் முதல்வர் ஜெயலலிதா.
உற்சாக வரவேற்பு
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கார் மூலம் விமான நிலையம் வந்து ஜெயலலிதா, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சி வரும் ஜெயலலிதாவை வரவேற்க அ.தி.மு.க.வினர் ஸ்ரீரங்கம் முழுவதும் ஏராளமான விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர். முதல்வரின் வருகையையொட்டி திருச்சி திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.