வண்டலூர் பூங்கா புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய ஜெயலலிதா
சென்னை: வண்டலூர் பூங்காவின் புதிதாக பிறந்த புலிக்குட்டிக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 16.3.2014 அன்று அனு என்ற வெள்ளைப் புலி இரண்டு பெண் புலி குட்டிகளையும், ஒரு ஆண் புலி குட்டியையும் ஈன்றது. 23.3.2014 அன்று நம்ருதா என்ற புலி இரண்டு ஆண் புலி குட்டிகளை ஈன்றது.
தாரா, மீரா, பீமா
முதல்வர் ஜெயலலிதா அனு என்ற வெள்ளைப் புலி ஈன்றெடுத்த இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு தாரா மற்றும் மீரா என்றும், ஒரு ஆண் புலி குட்டிக்கு பீமா என்றும் பெயர் சூட்டினார்.
ஆதித்யா, கர்ணா
நம்ருதா என்ற புலி ஈன்றெடுத்த இரண்டு ஆண் புலி குட்டிகளுக்கு ஆதித்யா மற்றும் கர்ணா என்றும் பெயர் சூட்டினார்கள்.
உத்ரா குட்டி
மேலும் சத்யமங்கலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் பெண் புலி குட்டிக்கு உத்ரா என்று பெயர் சூட்டினார்கள்.
7 புலிக்குட்டிக்களுக்கு
முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று ஏழு புலிக்குட்டிகளுக்கு அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார்.
ஆய்வு செய்த ஜெ
பூங்காவில் வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பார்வையாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
20 லட்சம் பார்வையாளர்கள்
அவரது அறிவுறுத்தலின்படி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வன உயிரினங்களை ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளிக்கின்றனர்.