ஜெ., விடுதலைக்கு குமாரசாமி... ஜெ., மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி - உத்தரவிட்ட பழனிச்சாமி
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தண்டனையில் இருந்து காப்பாற்றி விடுதலை அளித்தவர் கர்நாடகா நீதிபதி குமாரசாமி. இப்போது ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க வருகிறார் ஆறுமுகசாமி.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தவர் குமாரசாமி. ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி விசாரிக்க வந்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி. நீதிபதியை நியமித்து உத்தரவிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை நீதிபதி ஆறுமுகசாமி விடுவிக்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
18 ஆண்டுகால நீண்ட விசாரணைக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
நீதிபதி குமாரசாமி
இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.
குமாரசாமியின் தீர்ப்பு
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள்.
அதிமுகவினரின் தெய்வமான குமாரசாமி
நால்வர் மீதான குற்ற நிரூபணமும், சிறைத் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து ஜெயலலிதா விடுவித்தார் நீதிபதி குமாரசாமி. இதனையடுத்து அதிமுகவினரின் தெய்வமாகவே கொண்டாடப்பட்டார் ஆறுமுகசாமி.
ஆனால் கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டில் குமாரசாமியின் கணக்கு பொய் கணக்கு என்று தெரியவந்து விட்டது.
ஜெயலலிதா மரணம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தமே நடத்தினார். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
விசாரணை கமிஷன்
பிளவுபட்டிருந்த அணிகள் ஒன்றாக இணைவதற்காக ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 40 நாட்களுக்குப் பின்னர் தற்போது விசாரணைக்கமிஷன் நீதிபதியாக ஆறுமுகசாமியை அறிவித்துள்ளார் முதல்வர்.
65 வயதாகும் ஆறுமுகசாமி 1952ஆம் ஆண்டு கோவையில் அர்த்தநாரிசாமி மற்றும் மாரியம்மாள் தம்பதிக்கு மகனான பிறந்தவர். 1974ம் ஆண்டில் சட்டம் பயின்று முடித்தார். 1991ம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 1998ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டவர். 2014ம் ஆண்டு பணி ஓய்வு பெறும் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்கும் விசாரணை கமிஷன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து அதிமுக தொண்டர்களின் மனதில் இடம் பெறுவாரா ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி என்று பார்க்கலாம்.