முல்லைப் பெரியாறு-ஜல்லிக்கட்டு விவகாரத்தில் துரோகம் இழைத்த திமுக - காங்.: மதுரையில் ஜெ. பேச்சு
மதுரை: முல்லைப் பெரியாறு மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் துரோகம் இழைத்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 47 தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மதுரையில் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதிமுக அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், குடும்ப நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுவர் கருணாநிதி. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என குற்றம்சாட்டினார் ஜெயலலிதா.
மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசன வசதியை தரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து தற்காலிமாக 136 அடி குறைக்கப்பட்ட பின்னர், மீண்டும் 152 உயர்த்தப்பட்ட முழு மூச்சுடன் செயல்பட்டு வருவது அதிமுக மட்டுமே எனக் கூறினார்.
மேலும், முல்லை பெரியாறு அணை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையில் 142 வரை நீரை சேமித்து வைக்கலாம் என கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும், அணையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும், நிபுணர்களின் முடிவுக்குப் பின்னர் முழு கொள்ளவான 152 அடி வரை நீரை சேமிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்காமல், 136 அடி வரை மட்டுமே நீரை சேமிக்கும் வகையில் கேரள அரசு சிறப்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தின் போது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என 2006 தேர்தலில் வெற்றி பெற்ற கருணாநிதி அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார். கருணாநிதி தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைத்து விடுவார்.
பொதுநலம் என்றால் பொறுமை காப்பார் கருணாநிதி. முல்லைப்பெரியாறு பாசனத்தை நம்பியிருந்த மக்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழக அரசு சிறப்பான வாதங்களை எடுத்து வைத்தது. இதனால், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம். திமுகவினர் வாக்கு சேகரிக்க வரும்போது நீங்கள் விரட்டியடியுங்கள்... செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என வாக்காளர்களிடம் கேட்டார்.
மேலும் அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் துரோகம் இழைத்தது திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 11.7.2011 அன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகளும் சேர்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
தாங்கள் செய்த தவறுகளை மன்னிக்கும்படி திமுகவினர் கூறி வருகின்றனர். தமிழக மக்கள் அவரது தவறுகளை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மேலும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தருவேன் என வாக்குறுதி அளித்தார்.