கச்சா எண்ணெய் விலை அப்படியே இருக்கும்போது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
சென்னை: உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் ஏதுமில்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பையும் உலக சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலையையும் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன.
உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஏதுமில்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த விலை உயர்வு நியாயமானதல்ல.
கடந்த 6.11.2015 முதல் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.60 வீதமும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.0.40 வீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில் தற்போதைய இந்த விலை உயர்வு சரியானது அல்ல.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கான கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருந்தாலே தற்போதைய இந்த விலை உயர்வு தேவையற்றதாக இருந்திருக்கும்.
கடந்த நவம்பர் மாதம் முதல் மத்திய அரசு 5 முறை பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியுள்ளது. பெட் ரோலுக்கான கலால் வரியை ரூ.8.35 என்ற வீதத்திலும் டீசலுக்கான கலால் வரியை ரூ.6.90 என்ற வீதத்திலும் உயர்த்தி மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டிக்கொண்டு, சாமானிய மக்கள் மீது விலை உயர்வை சுமத்துவது நியாயமற்ற செயல் ஆகும்.
அவ்வப்போது அமெரிக்க டாலருக்கு ஏற்படும் தேவையைப் பொறுத்தே இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுதல் ஏற்படுகிறது. பெரும் தனியார் நிறுவனங்கள் கடன் திருப்பிச் செலுத்துவதாலும், இறக்குமதி அதிகரிப்பாலுமே இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
அது போலவே இந்திய கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அன்னிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் கிடைக்கக் கூடிய லாபத்தைக் கணக்கிட்டே அன்னிய செலாவணி முதலீடுகள் செய்வதும் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்வதும் நடைபெறும்.
இது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது.
முந்தைய காங்கிரஸ் கூட் டணி மத்திய அரசு கடை பிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயக் கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றினை இறக்குமதி செய்தால் என்ன விலை என்று கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்வது சரியானதல்ல என்றும் நான் பல முறை எடுத்துக் கூறியுள்ளேன்.
இந்த தவறான விலை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என நான் மீண்டும் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலை உயரும். இதன் காரணமாக ஏழை, எளிய, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும்.
எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.