ராஜாஜி கெஞ்சி தடுத்தும் கேட்காமல் மதுக் கடைகளை திறந்த கருணாநிதி: ஜெ., தாக்கு !
சென்னை: ராஜாஜி கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் மதுக்கடைகளை திறந்த கருணாநிதி மதுவிலக்கு பற்றி பேசலாமா என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது பற்றி பலர் பேசி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியும் அதுபற்றி பேசுகிறார். வேறு யார் வேண்டுமானாலும் கூட மதுவிலக்கு பற்றி பேசலாம். ஆனால் கருணாநிதிக்கு அதுபற்றி பேச தகுதி இல்லை. மதுவை பற்றி ஒரு தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
கள்ளுக்கடையை திறப்பதை நியாயப்படுத்தியவர் கருணாநிதி. மதுவை அறிமுகப்படுத்தியதே திமுக தான். 1948 ல் காந்தியடிகள் இறந்த ஆண்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மதுவை ஆதரித்து சட்டசபையில் பேசியவர் ராஜாஜி கெஞ்சி தடுத்தும் கேட்காமல் மதுக்கடைகளை திறந்தவர் கருணாநிதி. 1971 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மதுவிலக்கை நீக்கினார் கருணாநிதி.
அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தால் நம்ப முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார். திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்று தெரிந்துதான் மதுவிலக்கு பற்றி கருணாநிதி பேசி வருகிறார். திமுக வெற்றி பெற போவதில்லை என்று அவருக்கு நன்கு தெரியும்.
எனவேதான் அரசியல் காரணங்களுக்காக மதுவிலக்கைப் பற்றி பேசி வருகிறார். மக்களை அதிகம் குடிக்க வைத்தது திமுக தான். மதுவிலக்கு விற்பனை திமுக ஆட்சி காலத்தில் பன்மடங்கு உயர்ந்திருந்தது. அதிமுக ஆட்சியில் மதுவிற்பனை பெருமளவு குறைந்துள்ளது.
எனது நெஞ்சார்ந்த குறிக்கோள், பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். ஆனால், மதுவிலக்கை பற்றி தீவிரமாக ஆராய்ந்துதான் முடிவெடுப்பேன். பூரண மதுவிலக்குதான் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால், ஒரே கையெழுத்தில் அதனைக் கொண்டு வருவது என்பது இயலாது. இதை படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.