தமிழகம் முழுவதும் மின்வெட்டு அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது- ஜெ., பெருமிதம்
சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்க ரூ.202 கோடியில் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழக சட்டசபை ஜூன் 16ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடியது. ஜூன் 17ஆம் தேதி அன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கடந்த 20ஆம் தேதி முதல் ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர். அமளி துமளியாக விவாதம் நடைபெற்றது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா உரை நிகழ்த்தினார். ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்

மக்கள் நலத்திட்டங்கள்
இரண்டாவது முறையாக என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்கள் சக்தியை கொண்டு கடந்த காலத்தில் செயல்பட்டதால் தான் மக்கள் மீண்டும் ஆட்சியை வழங்கியுள்ளனர். மக்கள் நிம்மதியாக வாழ பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. இதனால் தான் மக்கள் மீண்டும் ஆட்சியை வழங்கியுள்ளனர்.

ஆளுநர் உரை அரசு உரை
நல்ல திட்டங்களை அறிவார்ந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். சட்டசபையில் ஸ்டாலின் பேசும் போது, ஆளுநர் உரை அரசின் உரை எனக்கூறினார். ஆளுநர் உரை என்பது அரசின் உரை என கருணாநிதி முன்னரே கூறியுள்ளார்.

விவசாய கடன் ரத்து
தேர்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முறையாக கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு தொடர்ந்து கடன் மானியம் வழங்கப்படும்.

100% மானியம்
பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான வேளாண் துறைக்க கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் தான், திமுக ஆட்சி காலத்தை விட எனது ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துள்ளது. நுண்ணுயிர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை
தமிழகத்தில் 198 ஏரிகள் புனரமைக்கப்படும் என்றும், 48 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 4,778 ஏரிகள் சீரமைக்கப்படுவதோடு, 477 புதிய அணைகள் கட்டப்படும் என்றார். உலக வங்கியின் உதவியுடன் ரூ.2,950 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும். 37 இடங்களில், கடல்அரிப்பை தடுக்க ரூ.116 கோடியில் தூண்டில் வளைவு திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

உழவர் பாதுகாப்பு திட்டம்
உழவர் பாதுகாப்பு திட்டம், இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம் தொடரும். 60 ஆயிரம் பேருக்கு இலவச கறவைப்பசு வழங்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பெண்களுக்கு செம்மறி மற்றும் வெள்ளாடு வழங்கப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் 1406 கால்நடை மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.

கல்வியில் முதலிடம்
54 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. பள்ளி இடைநிற்றல் கடந்த 5 ஆண்டில் 11 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைந்துள்ளது. தொடக்க கல்வி சேர்க்கை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. உயர்கல்வியில், இந்தியாவிலேயே தமிழகம் 44. 8 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது.

மெட்ரோ ரத்த வங்கி
டெல்லிக்கு அடுத்த படியாக சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைய உள்ளது. சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்க ரூ.202 கோடியில் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம்
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மி்ன்வெட்டு அறவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு நீர்மட்டம்
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்பு குழு அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு வெற்றி கிடைக்கும் என்பதில் அதிக நம்பிக்கையுள்ளது என்றார்.

விவசாயிகள் மேம்பாடு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள், முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே தான், கால்நடை மேம்பாட்டிற்கும், பால் உற்பத்திக்கும், முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கால்நடை மருத்துவமனைகள்
கடந்த 5 ஆண்டுகளில் 830 புதிய கால்நடை மருந்தகங்கள், 200 கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,406 புதிய, கால்நடை மருத்துவ நிலையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 1,163, கால்நடை மருத்துவ நிலையக் கட்டடங்கள், புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பால் உற்பத்தி
ஏழைகளின் வாழ்வாதாரம் பெருகும் வகையிலும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், கடந்த 5 ஆண்டுகளில் 60,000 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 5.35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் உயர்த்தப்பட்டுள்ளது.

பால் பவுடர் தொழிற்சாலை
பால் குளிர்விக்கும் அறைகளின் திறன் நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் குளிர்விக்கும் அறைகள், பல்வேறு பால்பண்ணைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் நாள் ஒன்றுக்கு, 20 மெட்ரிக் டன் திறனுள்ள பால் பவுடர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு
டீசல் விலை உயர்வு, பொருட்களின் தேவை அதிகரிப்பால் விலைவாசி உயர்ந்துவிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பதிலுரைக்குப் பின்னர் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.












Click it and Unblock the Notifications