ஸ்ரீரங்கத்தில் ரூ.43 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி- நேரில் சென்று ஜெ. திறந்து வைக்கிறார்
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ரூ.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைக்க முதல்வர் ஜெயலலிதா இம்மாத இறுதியில் அங்கு செல்லவிருக்கிறார்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சிற்பக் கலைகளைப் பற்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி ரங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்திரிகா நிவாஸ் கட்டப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இதற்கான அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து ஸ்ரீரங்கம் மேலூர் அருகே உள்ள பஞ்சக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் ரூ.43 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய எழில்மிகு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இங்கு 1000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டில்கள், லாக்கருடன் கூடிய மிகப் பெரிய கூடமும், 25 ஏசி மற்றும் ஏசி அல்லாத தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது.
மேலும், 100 இரட்டை படுக்கைகள் கொண்ட அறைகள் பாதுகாப்பு பெட்டகம், உணவு கூடம், குளியல் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், நடை பயிற்சி மேற்கொள்ள தனி பகுதி என பல்வேறு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு வளாகமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் யாத்திரிகா நிவாஸை ஜெயலலிதா திறந்து வைக்க உள்ளார்.
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தனது தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டுத்தி வருகின்றார். மேலும், ஒவ்வொரு முறையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுவரை 4 முறை ஸ்ரீரங்கம் வந்துள்ள ஜெயலலிதா தற்போது 5வது முறையாக அந்த தொகுதிக்கு வரவிருக்கிறார்.