பந்தல் வாடகையை எப்ப தருவீங்க சார்? - பணம் தராத போலீஸார் மீது புகார் கொடுத்த பந்தல் அமைப்பாளர்
ஜோலார்பேட்டை: பந்தல் அமைத்த வாடகையைத் தராமல் இழுத்தடித்த போலீஸார் மீது அவர்கள் இருக்கும் காவல் நிலையத்துக்கே சென்று தொழிலாளி ஒருவர் புகார் அளித்தச் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார். தற்போது, விடுதலையை எதிர்பார்த்து, பரோலில் வந்துள்ள அவர், ஜோலார்பேட்டையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கிறார்.

உத்தரவு
இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் போலீஸாரின் உத்தரவின்படி, பேரறிவாளன் வீட்டுக்குப் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் பந்தல் அமைத்து மின் விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

50 நாட்கள்
இதற்கான, வாடகைப் பணத்தை போலீஸாரே தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், ஐம்பது நாட்களைக் கடந்தும் வாடகைப் பணம் தராததால், மனமுடைந்த பந்தல் அமைப்பாளர் சம்பத், ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கே சென்று அங்குப் பணிபுரியும் போலீஸார் மீதே புகாரளித்துள்ளார்.

எப்போது
அவரின் புகார் மனுவில், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் பேரறிவாளன் வீட்டின் முன்பு நான்குப் பந்தல், நாற்காலிகள் மற்றும் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்துள்ளேன். நேற்று வரை அதற்கான வாடகை 45,000 ரூபாய் ஆகிறது. ஆனால், போலீஸார் 11,000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதித் தொகையை எப்போது தருவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மீதித் தொகை
இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் ஓரிரு நாளில், மீதித் தொகையை கொடுத்துவிடுவதாகவும் சம்பத்திடம், தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மீது போலீஸாரிடம் புகார் கொடுக்கும் நிலையில் போலீஸார் மீது அவர்கள் பணியாற்றும் காவல் நிலையத்திலேயே ஒருவர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications