தப்பியது மு.க. அழகிரி எம்.பி. பதவி! மார்க்சிஸ்ட் வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!!

கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டார் மு.க.அழகிரி. தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரும் ஆனார்.
இந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்டுத் தோல்வியுற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப. மோகன், அழகிரி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றதாக கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது மோகன் மரணமடைந்தார். இதையடுத்து தேர்தலில் அவரது மாற்று வேட்பாளராக இருந்த லாசர், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
இதையடுத்து நீதிபதி தனபாலன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மாலை 3 மணி அளவில், நீதிபதி தனபாலன், மு.க. அழகிரியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து அழகிரி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications