ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு… எண்ணப்படும் நாட்கள்
சென்னை: தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு வாய்தா மேல் வாய்தா கேட்கப்பட்ட கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றது. தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
செப்டம்பர் 20 ஆம் தேதி இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறப்போகிறது. ஏனெனில் அன்றைய தினம்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் இது குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 21.6.96 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தாக்தல் செய்த வழக்குதான் இப்போது பிரம்மாண்டமாக உருப்பெற்றுள்ளது.
சுப்ரமணிய சுவாமியும் வழக்கும்
சுப்ரமணியசுவாமி செய்த மனுவில், "கடந்த 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.
ஜெயலலிதா கைது
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
பெங்களூரு நீதிமன்றத்தில்
2001 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004 ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
8 நீதிபதிகள் நியமனம்
2004 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதியாக முடிகவுடர் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் 8வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார்.
வேகமெடுத்த வழக்கு
பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்ட பின்னர்தான் ஆமையாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்புவழக்கு ஜெட் வேகமெடுத்தது.
பலகோடி சொத்துக்கள்
கடந்த மார்ச் 7ஆம் தேதிமுதல் இந்த வழக்கில் இறுதி வாதங்கள் பெங்களுரூ தனி நீதிமன்றத்தில் நடைபெற்றன... அரசு வழக்கறிஞரின் இறுதிவாதம், குற்றம்சாட்டப்பட்டவர்களின் இறுதிவாதம் என பரபரப்பான பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான வாதங்களை இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக படிக்கலாம்.