சமையல் கேஸ் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…மானிய திட்டத்தில் சேர 3 நாட்களே பாக்கி!
சென்னை: சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் சேர 30-ந் தேதி இறுதி நாளாகும்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் நாடு முழுவதும் ஜனவரி 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஒரு கோடியே 53 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் ஒரு கோடியே 38 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். இது 89.6 சதவீதமாகும்.
இதில் அதிகபட்சமாக திருச்சியில் 91.65 சதவீதமும், குறைந்தபட்சமாக கடலூரில் 88 சதவீத பேரும் சேர்ந்துள்ளனர். இன்னும் 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேராமல் உள்ளனர்.
சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்கான கால அவகாசம் மார்ச் 31-ந் தேதியுடன் முடிந்து விட்டது. எனவே நேரடி மானியத் திட்டத்தில் சேராத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மானியம் அல்லாத விலையில் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
அதாவது எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயிக்கும் மானியம் இல்லாத விலையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கு வரும் 30-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடு முடிய இன்னும் 3 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு முன் வைப்புத்தொகை ரூ.568 மற்றும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான மொத்த மானியத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
ஜூன் 30-ந் தேதிக்கு பின்னரும் இந்த திட்டத்தில் சேர முடியும். ஆனால் அவ்வாறு இணைபவர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மானியம் கிடைக்காது. வாடிக்கையாளர்கள் எப்போது இந்த திட்டத்தில் இணைகிறார்களோ அந்த மாதம் முதல் மானியத் தொகை வழங்கப்படும்.