ஜெ.க்கு 4 ஆண்டு சிறை- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நீதிபதி குன்ஹா அளித்த நாள் இன்று!
கர்நாடக நீதிபதி மைக்கல் டி.குன்ஹா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் வழங்கி தீர்ப்பு அளித்த நாள் இன்று.
சென்னை: கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி, பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி மைக்கல் டி.குன்ஹா, சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி அபாரதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தார் என ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி 1996ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். அப்போது டிஜிபியாக இருந்த லத்திகா சரண் இந்த வழக்கை விசாரித்தார். அந்த விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
அரசு தரப்பு வழக்கு
பின்னர் பிணையில் விடுவிக்கபட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு ரூ.66.65 கோடியாகும். இவ்வழக்கு 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசால் 1996 டிசம்பர் அன்று அரசுத்தரப்பு வழக்காக மாற்றப்பட்டது.
கூட்டுச் சதி
1997-ம் ஆண்டு இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு, இவ்வழக்கு முழு வீச்சில் விசாரிக்கப்பட்டது. 250 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
1136 பக்க தீர்ப்பு!
1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை பல மாதங்களாக எழுதிய நீதிபதி மைக்கல் டி. குன்ஹா, 1136 பக்கங்களுக்குத் தீர்ப்பு எழுதினார்.முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் எழுதினார். அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம்வரை நீதிபதியின் தீர்ப்பும், 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் எழுதப்பட்டது.
முதல்வர் பதவியை இழந்த ஜெ.
கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபப்ட்டது என்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. அதிமுக தொண்டர்கள் தெருவெங்கும் கதறி அழுத காட்சி மீடியாக்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டது. இந்த தண்டனை மூலம் ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை இழந்தார். உடனே கர்நாடாக உயர்நீதிமன்ரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அது நிராகரிக்கபப்ட்டது.
மண்சோறு, காவடி...!
ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டும் என அதிமுக தொண்டர்கள் கோயில் கோயிலாக காவடி எடுத்து, மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர். தற்போது சசிகலா, இளவரசி, சுதகரன் இந்த வழக்கில் தண்டனை பெற்றுத்தான் சிறையில் உள்ளனர்.