மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மது கொலை- சிபிஐ விசாரிக்க உத்தரவு
பத்து மாதங்களில் ரியல் எஸ்டேட் விவகாரங்கள் தொடர்பாக நடந்த கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கே.எம்.அலாவுதீன் ராவுத்தர் டிரஸ்டிற்குச் சொந்தமான 1.64 ஏக்கர் காலியிடம் மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 50 கோடி. இந்த டிரஸ்ட் நிர்வாகியாக ஜமால்முகம்மது சின்ன சொக்கிக்குளம் பகுதியில் வசித்து வந்தார். அவருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இவர் கடந்த ஆகஸ்ட் கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்கர் மற்றும் பூங்கொடி, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சித்திக் என்பவன் சிக்கினான்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா அவரது உறவினரும் சகலை பழனிவேலு, கொளுந்தியாள் உமாராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட மகேந்திரவர்மன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜமால் கொலையில் அரசியல் கட்சி சம்பந்தப்பட்டு இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அவரது உறவினர் மனைவியும், உறவினர்களும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், 10 மாதங்களில் நடந்த கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு ஆணையிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.