ஜெ. பதவியை துஷ்பிரயோகம் செய்து சொத்து குவித்த சசி குடும்பம்.. கே.பி.முனுசாமி பாய்ச்சல்
ஜெயலலிதாவின் பதவியை சசிகலா குடும்பத்தின துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி: ஜெயலலிதாவின் பதவியை சசிகலா குடும்பத்தினர் துஷ்பிரயோகம் செய்து சொத்துகளை குவித்து விட்டனர் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி. முனுசாமி குற்றம்சாட்டினார்.
சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான ஜெயா டி.வி உள்ளிட்ட நிறுவனங்களும், உறவினர்களின் வீடுகளிலும் நான்கு நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், ஜெயா டி.வி நிர்வாக அதிகாரி விவேக்கின் 100 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
இந்த சோதனையானது போயஸ் கார்டன், விவேக் வீடு ஆகிய இடங்களில் இன்று 4-ஆவது நாளாக தொடர்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வருமான வரி சோதனைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் தொடர்பு இல்லை. ஜெயலலிதாவை ஏமாற்றியும், அவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை குவித்துள்ளனர்.
இதற்கான ஆதாரம் சசிகலா உறவினர்கள் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரிகிறது. காந்தியின் பேரன் இல்லை என்று மட்டும் அல்ல, காந்தி என்ற பெயரைக் கூற கூட டிடிவி தினகரனுக்கு தகுதியில்லை என்றார் முனுசாமி.