புரட்சிக் கவிஞர் பிறந்த மண் காவிமயம் ஆகலாமா.. புதுவைக்கு தேவை மாநில அந்தஸ்து.. கி. வீரமணி ஆவேசம்
புதுவைக்குத் தேவை மாநில அந்தஸ்து என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: புரட்சிக் கவிஞர் பிறந்த மண்ணை காவி மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண்ணை காவிமயமாக்குவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

யார் இந்த கிரேண்பேடி?
புதுவையில் டில்லி பிரதேசத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாறிய ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரேண்பேடியை பா.ஜ.க. நிற்க வைத்து அவர் தோல்வியுற்ற நிலையில், அவரைப் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கச் செய்தது மத்திய பிஜேபி அரசு.

தொல்லைகள் அதிகம்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுடைய ஆட்சிக்குக் கொடுத்து வரும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

கேலிக் கூத்து
ஓராண்டும் சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அதற்கு எதிராகவே ஒரு போட்டி அரசாங்கம் நடத்துவதுபோல ஆணைகளைப் பிறப்பித்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருவது எவ்வகையில் சரியானது?

குறுக்கு வழியில் ஆட்சி
அம்மாநில துணை நிலை ஆளுநருக்கும், முதல் அமைச்சருக்கும் சுமூக அரசியல் உறவு இருப்பதின் மூலமே மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தர முடியும்.
மத்திய அரசு குறுக்கு வழிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை இப்படிக் அலைக்கழிப்பது, அதிகார பறிப்புக்கு உள்ளாக்குவது, அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு - அதன் பீடிகையில் உள்ள ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்துக்கு முரண் பாடுதானே!

புதுவைக்குத் தேவை மாநில அந்தஸ்து!
எனவே புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்குரிய போராட்டத்தை அம்மக்கள் முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இதில் கட்சி, ஜாதி, மதம் இல்லை - நியாயங்கள் நீதி மட்டுமே உண்டு!

புரட்சிக் கவிஞர் மண்ணில் காவி மயமா?
புதுவை மக்களே, காவி மண்ணை புரட்சிக் கவிஞர் பிறந்த பூமியில் தூவ அனுமதிக்காதீர்! ஜனநாயகம் காக்கப்பட ஒன்று திரண்டு உரிமைக் குரல் எழுப்புங்கள்! இவ்வாறு கி. வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications