இலை, தழையுடன் வந்து பழங்குடியினர் போராட்டம்
தென்காசி: தென்காசி கோட்டஆட்சிதலைவர் அலுவலகத்தை இலை, தழைகளை உடலில் கட்டியபடி வந்து பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர்.
தென்காசி வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பழங்குடியினத்தை சார்ந்த காட்டு நாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜாதிசான்றிதழ் இல்லாமல் தங்களது குழந்தைகளை 10ம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியாமல் கூலி வேலைக்கு அனுப்பி வருகின்றனர்.
தங்களைப் போல் அல்லாமல் தங்களது குழந்தைகளாவது நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செங்கோட்டை, தென்காசி தாலுகா அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்து பல மாதங்கள் அலையாய் அலைந்தும் அதிகாரிகள் இந்த ஜாதி இங்கு இல்லை என்று கூறி இவர்களுக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இம்மக்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றமும் இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும் அதிகாரிகள் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து ஏற்கனவே சாலைமறியல் போராட்டத்தை கம்யூ.கட்சி நடத்தியது. அப்படியிருந்தும் இவர்களுக்கு நீதி கிடைத்த பாடில்லை.
இந்நிலையில் இன்று இந்த இன மக்கள் சுமார் 100க்கும் மேற்ப்பட்டோர் குழந்தைகளுக்கு இலை,தழைகளை உடலில் கட்டி தென்காசி கோட்டாட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது பரப்பரப்பு உருவானது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சுமார் 50ஆண்டு காலமாக எங்கள் வாழ்க்கை சாலைகளில் குப்பையை பொறுக்கி குடும்பத்தை ஒட்டி வருகிறோம். எங்களது குழந்தைகளாவது படிக்கட்டும் என்று பள்ளிக் கூடம் அனுப்பினால் ஜாதி சான்றிதழ் தடையாய் உள்ளது.
வேறு ஜாதியினர் எங்கள் ஜாதி பெயரில் சான்றிதழ் கலை வாங்கும் நிலை செங்கோட்டையில் உள்ளது. தமிழக அரசு எங்கள் மீது கருணை கொண்டு ஜாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.