சூட்டை கிளப்பியுள்ள கபாலி பாடல் வரி.. ஆதரவு, எதிர்ப்பு குரல்களால் பதற்றத்தில் படக்குழு
சென்னை: கபாலி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வரி உலகம் எங்கும் சூட்டை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இயக்குநர் ப.ரஞ்சித்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை கொட்டி வருகிறார்கள்.
இன்று எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும், சிறு வயதில் ரஜினிகாந்த் ரசிகராகத்தான் பெரும்பாலானோர் இருந்திருப்பார்கள். அதனால்தானோ என்னவோ, ரஜினி படங்களுக்கு ரசிக பேதமின்றி அத்தனை கூட்டம் அலைமோதுகிறது.
பாட்ஷா போன்ற டான் கதையோடு கபாலி களமிறங்கியிருப்பது படக்குழுவினரால் வெளியிடப்பட்ட, அதன் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் வரிகள் மூலம் புலப்படுகிறது. இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமூக நீதி
அதேநேரம், பாட்ஷா போலன்றி இதில் சமூக நீதிக்கான தாதாவாக ரஜினிகாந்த் அரிதாரம் பூசியிருப்பார் என்பதை பாடல் வரிகள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
உலகம் ஒருவனுக்கா
குறிப்பாக ஒரு பாடல் வரி சமூக வலைத்தளங்களில் சூட்டை கிளப்பியுள்ளது. "உலகம் ஒருவனுக்கா.." என தொடங்கும் பாடல்தான் இன்றைய சமூக வலைத்தளங்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆண்டையரின் கதை முடிப்பான்
அந்த பாடலில் வரும் "கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்" என்ற வரி பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே பாடலில் வரும் "மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது" என்ற வரியும் தங்களை ஆதிக்க சாதி என எண்ணுவோரை கடுப்பேற்றியுள்ளது.
கொந்தளிப்பு
ஆண்டையரின் கதை முடிப்பான் என்ற பாடல் வரியை படத்தில் வைத்ததன் மூலம், ப.ரஞ்சித் தனது இன்ஷியலில் உள்ள 'ப' வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிவிட்டார் என்று அவரது ஜாதியை குறி வைத்து தாக்கிய ஒரு மோசமான பேஸ்புக் பதிவை பார்க்க நேர்ந்தது.
எல்லோருமே ஆண்டையர்தான்
முன்பெல்லாம் மேட்டுக்குடி என்பது குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் வார்த்தை பிரயோகமாக இருந்தது. இப்போது தலித் தவிர்த்த பிற ஜாதியினரில் பெரும்பாலானோர் தங்களை ஆண்டையர் எனவும், மேட்டுக்குடி எனவும் கருத்திக்கொள்வதால், பாடலுக்கான எதிர்ப்பும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
ஆதரவு குரல்கள்
அதேநேரம், நடுநிலைவாதிகளும், தலித் ஆதரவு எழுத்தாளர்களும், சமூக நோக்கர்களும், பாடலுக்கு ஆதரவு தருகிறார்கள். ரஞ்சித் நெற்றிப்பொட்டில் அடித்துள்ளார் என்கிறார்கள் அவர்கள்.
காலடி மண்ணு ஓ.கேவா
"எஜமான் காலடி மண்ணெடுத்து, நெற்றியில பொட்டு வைப்போம்.." என்ற பாடலை ரசித்தவர்கள், ஆண்டையரின் கதை முடிப்போம் என்றால் மட்டும் அலறுவது ஏன்? என்ற கேள்வியோடு ஒரு பேஸ்புக் பதிவு கண்ணில் பட்டது.
பட்டிமன்றங்கள்
பேஸ்புக், டிவிட்டர் என எங்கு பார்த்தாலும், ஆதிக்க ஜாதியா, அதை ஒடுக்க நினைக்கும் ஒடுக்கப்பட்ட ஜாதியா.. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பட்டிமன்றங்கள் பலே ஜோராக நடக்கின்றன. கபாலி திரைப்படம் வெளியாகும்போது, இந்த பாடல் வரிகளால் ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் படக்குழு உள்ளது.