கலாம் நினைவிடம் ஓராண்டுக்குள் அமைக்கப்படும்: வெங்கையா நாயுடு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கலாம் நினைவிடம் அமைக்கும் பணி ஓராண்டுக்குள் நிறைவடையும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாளான நேற்று அவரது உடலை நல்லடக்கம் செய்துள்ள பேக்கரும்பில் 7 அடி உயர வெண்கலச் சிலை திறப்பு விழாவும், அவரது நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது,
ஜெயலலிதா
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று கலாம் நினைவிடத்தை விரிவுபடுத்த நிலம் ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாபெரும் மனிதரான அப்துல் கலாம் மறையவில்லை. அவர் நம்மோடு தான் இருக்கிறார்.
சிலை
கலாமுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு மனிதர் இருந்தார் என்று மக்கள் நினைத்துப் பார்க்கவே நினைவிடம் கட்டப்படுகிறது. அவரது வாழ்வின் பெரும்பாலான பகுதி மாணவர்கள், இளைஞர்களுடன் கழிந்தது.
குடியரசுத் தலைவர்
கலாம் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது நான் பாஜக அகில பாரத தலைவராக இருந்தேன். அவர் என்னை பார்க்கும் போது எல்லாம் தெலுங்கில் நலமாக உள்ளீர்களா என்று கேட்பார்.
அம்ருத் திட்டம்
அம்ருத் திட்டத்தில் கலாம் நினைவகம் உள்ள இந்த பகுதியையும் சேர்த்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக முதல்கட்டமாக ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஓராண்டு
கலாம் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு அங்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்த்துவிட்டு வாருங்கள் என்று மோடி என்னிடம் தெரிவித்தார். நினைவிடம் அமைக்கும் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும்.