நர்மதையை பங்கிட்ட அனுபவம் இருக்கே.. காவிரியில் அதைக் காட்டுங்கள்.. மோடிக்கு கமல் அட்வைஸ்
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் வீடியோ பதிவை வெளியிட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் கடிதத்தையும் டுவிட்டரில் அனுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
மேலும் அதில் சொல்லாத கருத்துகளை கடிதம் வாயிலாக கூறுவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் பிரதமருக்கான கடிதத்தையும் எழுதியுள்ளார்.
|
தமிழர்களுக்கு அநீதி
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அக்கறையுள்ள தமிழனாகவும் இந்தியக் குடிமகனாகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஐயா, தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியின் விளைவாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைத் தாங்கள் அறிவீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறியதை எதிர்த்து, நீதி கேட்டு நடக்கும் போராட்டமே இது. தீர்ப்பை சொல்லியதன் மூலம், தனது அரசியல் சாசனப் பங்கினை உச்சநீதிமன்றம் நிறைவேற்றிவிட்டது. இப்போது அந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் அரசியல் சாசனக் கடமை.

நர்மதை நதி நீர்
இதற்கு முன்பு குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக நர்மதா நதியின் நீரை 4 மாநிலங்களுக்கு இடையில் வாரியத்தின் பகிர்ந்து கொண்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. இப்போது இந்திய திருநாட்டின் பிரதமராக, உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சொல்லிலும், செயலிலும் முழுமையாக நிறைவேற்றத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டியது உங்கள் கடமை.

தேர்தலில் அக்கறை
தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், கர்நாடகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் காரணமாகவும் அதில் உங்கள் கட்சிக்கு இருக்கும் "அக்கறை" காரணமாகவும் தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என நம்பத் தொடங்கிவிட்டார்கள். இந்த தேசத்தின் பிரதமராக அப்படி ஒரு தவறு நடைபெறவில்லை என்பதை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதன் மூலம் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை.

உறுதி செய்ய வேண்டியதும் கடமை
தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வழியாகப் பெற வேண்டிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டை உறுதி செய்வதும் உங்கள் கடமை.
உங்கள் உடனடி செயல்பாட்டை உடனே எதிர்நோக்குகிறேன்.
தங்கள் உண்மையுள்ள
கமல்ஹாசன்
என்று அந்த கடிதத்தில் கமல் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications