தமிழகத்து கெஜ்ரிவாலாக மாறுகிறாரா கமல்?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு நிதி திரட்ட கெஜ்ரிவால் கையாண்ட முறையையே கையில் எடுத்துள்ளார்.
சென்னையில், இன்று நடிகர் கமல்ஹாசன் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசினார். ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். நவம்பர் 7ல் கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை, கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் என்று கூறிய கமல் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.
மேலும், ரசிகர்களிடம் பணம் வசூலித்து கட்சி நடத்தப்போவதாக அவர் கூறினார். இதற்கு கணக்கு காட்ட இந்த செயலி பயன்படும் என்றும் கமல் தெரிவித்தார்.
தொழிலதிபர்களிடம் நிதி
பெரும்பாலான பிற கட்சிகள், தொழிலதிபர்களிடம் பணம பெற்று கட்சி நடத்துவது வழக்கம். எனவே ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலதிபர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டிய நிலை அந்த கட்சிகளுக்கு ஏற்படுவது உண்டு.
மொய் விருந்து
இந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்கவே, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தொண்டர்களிடமிருந்தே பணத்தை திரட்டி கட்சி நடத்துவதாக அறிவித்து அதையும் செய்தார். இதற்காக 'சின்னக்கவுண்டர்' திரைப்பட சுகன்யா கதாப்பாத்திரம் பாணியில், மொய் விருந்து நடத்தி பணம் வசூலித்தார்.
நடைமுறை எப்படி?
இப்போது கமல்ஹாசனும், தனது தொண்டர்களிடமிருந்து பணத்தை திரட்டி கட்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் கமல் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலருக்கும் முதிய வயது ஆகிவிட்டது. இப்போது அவர்கள் சம்பாதிக்கும் திறனுடன் இருப்பார்களா என்பதே சந்தேகம். கமல் அரசியல் மீது ஈர்ப்பு கொண்ட பொதுவான இளைஞர்களின் பங்களிப்புதான் கட்சிக்கான நிதியை திரட்ட உதவும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கமல்-கெஜ்ரிவால் நட்பு
கமல்ஹாசன், சில வாரங்கள் முன்பு சென்னையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தனது வீட்டில் கெஜ்ரிவாலுக்கு மதிய விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது, கட்சி தொடங்குவதற்கான நிதி விவகாரம் குறித்து கெஜ்ரிவாலிடம் கமல் ஐடியா கேட்டதாக கூறப்பட்டது. அந்த ஐடியாதான் இப்போது செயல்வடிவம் பெறுவதாக தெரிகிறது.
இந்த பணம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா
போஸ்டர் அடிப்பது, தொலைக்காட்சி, பத்திரிகை மீடியாக்களில் விளம்பரம் செய்வது போன்றவற்றை சமாளிக்க வேண்டுமானால் இந்த நிதி போதும். ஆனால் வாக்களிக்க பணம் கேட்கும் சில பொதுமக்களை எப்படி கமல் கட்சி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.