நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.. மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு.. கமல் டுவிட்
முரசொலி பவளவிழாவில் பங்கேற்றுச் சென்ற சூட்டோடு நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே என்று நடிகர் கமல் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரவானால் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்வதை நடிகர் கமல் வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படிப் பல டுவிட்டுகள் தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் இருந்தன. இதனால் தொடர்ந்து அமைச்சர்கள் கமலை விமர்சனம் செய்தாலும், அதற்கும் பதில் சொல்லியே வருகிறார் கமல்.
அந்த வகையில் இன்றும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே. களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" என்று பதிவிட்டுள்ளார் கமல்.
இதனைத் தொடர்ந்து, சற்று நேரத்திற்கெல்லாம் மற்றொரு டுவிட்டையும் பதிவிட்டுள்ளார் கமல். அதில், "புரிந்தவர் புரியாதோருக்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு. தேசியமும் தான்" என்று கூறியுள்ளார்.
திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலி பவள விழா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிய சூட்டோடு இந்தப் பதிவை கமல் டுவிட்டரில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.