காரைக்குடி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா !
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (15.07.2017) கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் துணை ஆளுநர் மைக்கேல் சகாய அன்பு தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் முன்னால் துணை ஆளுநர்கள் ஏ.ஆர்.வி. கணேசன் மற்றும் எம்.அமலன் அசோக் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் என். நாச்சியப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். பொற்கிழிக்கவிஞர் நாகப்பன் காமராஜரைப் பற்றி கவிதை வசித்தார்.
மாணவர்கள் அருள் ராபின்சன் மற்றும் லட்சுமி நாராயணன் கீ போர்டு வாசித்து அனைவரையும் மகிழ்வித்தனர். மாணவிகள் தீபிகா, ஸ்வேதா, பிரேம் குமார் மற்றும் ஷன்மதி காமராஜரின் இலவசக் கல்வித்திட்டம், மதிய உணவுத்திட்டம் பற்றி பேசினர்.
காமராஜர் கல்விக்காக ஆற்றிய சேவைகளைக் குறித்து எட்டாம் வகுப்பு மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். காமராஜரின் வாழ்க்கை வரலாறை பாட்டாக ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பாடினர். ஆசிரியர் ஜெயராஜ் காமராஜரின் சாதனைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார்