நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைக்கும் திமுக தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்: கனிமொழி
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைக்கும் வெற்றி வீரர்களுக்கு இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அவர், ‘'நம் தமிழ் மொழியை காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி கூறும் வகையில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டங்களை தி.மு.க. சார்பில் நடத்தி கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து 1938 முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க.வின் பங்கு மகத்தானது.
கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறை சென்ற நடராஜன் சிறையிலேயே மரணமடைந்தார். மொழியை காக்க உயிரை விட்ட முதல் தியாகி நடராஜன். தி.மு.க.வை சேர்ந்த மொழிப்போர் தியாகி சின்னசாமி, தமிழ் மொழியை காக்க திருச்சியில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். தமிழ்மொழியை காக்க உயிர் தியாகம் செய்த இயக்கம் தி.மு.க. தமிழை செம்மொழி ஆக்கிய இயக்கம் தி.மு.க. இன்றும் பல்வேறு வகைகளில் நடைபெறும் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. தலைவர் கலைஞர் போராடி வருகிறார்.
குலசேகரபட்டினத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கலைஞர் பிரதமரிடம் கோரிக்கை வைத்து உள்ளார். மற்ற கட்சிகளும் இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியே தீரும் என மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைக்கும் வெற்றி வீரர்களுக்கு இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார் கனிமொழி.