அதனாலதான்டா 16 எருமைகளை கொடுத்தான்.. கலகலக்க வைத்த கவியரசு கண்ணதாசன்!
கண்ணதாசன் நகைச்சுவை உணர்வுள்ள மனிதனாக வாழ்ந்துள்ளார்.
சென்னை: சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய மாபெரும் கவிஞன் கண்ணதாசனுக்கு நகைச்சுவை உணர்விலும் பஞ்சமில்லையாம்.
தந்தையிடம் தான் கண்ட நகைச்சுவை உணர்வை மட்டுமல்ல, அவரிடம் பொதிந்துள்ள ஏராளமான நல்லியல்புகளை நம்மிடமே விவரிக்கிறார் கண்ணதாசனின் மகன் டாக்டர் ராமசாமி கண்ணதாசன்.
"எங்க அப்பா வீட்ல எல்லோர்கிட்டேயும் அன்பா இருப்பாரு. அறிவுரை செய்வாரு. ஆனா கண்டிஷன் போடமாட்டாரு. ஒரு ப்ரெண்டு போல எங்களை நடத்துவார். அப்பா எவ்வளவுதான் கவிதை, பாடல்கள் எல்லாம் எழுதியிருந்தாலும், எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சது அவருடைய குணம்தான்.
பலருக்கு இலவச சீட்
நேர்மை, நாணயம், அடுத்தவருக்கு உதவி செய்வது இதெல்லாம்தான். ஒருத்தன் தன் கண் முன்னால கஷ்டம் படறத அவரால தாங்கவே முடியாது. அந்த அளவுக்கு அவர் எல்லாருக்கும் உதவி செஞ்சிருக்காரு. அவர் மூலமா கலெக்டர், இன்ஜினியர்கள் ஆனவர்கள் நிறைய பேர் இருக்காங்க. எத்தனையோ பேருக்கு மெடிக்கல் சீட்டும், இன்ஜினியர் சீட்டும் பணம் இல்லாமலேயே இலவசமாவே வாங்கி கொடுத்தார்.

காய்கறிகாரனும்-கவிஞரும்
அவங்கள்ளலாம் எங்கள பாக்கும்போது சொல்வாங்க, "உங்க அப்பாவால தான் நாங்க இன்னைக்கு இந்த நிலைமையில உயர்ந்து இருக்கோம்"னு. அவருக்கு சின்ன வயசிலிருந்தே இந்த பழக்கம் இருந்திருக்குன்னு எங்க பாட்டி எங்க அம்மாக்கிட்ட சொல்லுவாங்களாம். ஒரு காய்கறிகாரன் வீட்டுக்கு வந்தால், கூட, எங்கேடா நம்ம வீட்டு ஆளுங்க பேரம் பேசி அவன் லாபத்தை கெடுத்துட போறாங்களோன்னு நெனச்சி, கவிஞர் காய்கறிகாரன்கிட்ட ஓடி வெளியே வருவாராம். "எங்க வீட்டு ஆளுங்க எல்லாம் விலையை குறைச்சி பேசி வாங்குவாங்க. அதனால நீ காய்கறி விலை எல்லாம் அதிகமாவே சொல்லு. அப்பதான் உனக்கு கட்டுப்படியாகும்"னு சொல்லிட்டு உள்ளே போய்டுவாராம்.

16 எருமைகளை கொடுத்தார்
அப்பாக்கிட்ட நகைச்சுவை உணர்வு அதிகம். அவருக்கு ரெண்டு மனைவி, 16 குழந்தைகள்-ன்னு எல்லாருக்கும் தெரியும். ஒருநாள் எங்க அப்பா கோபமா உட்கார்ந்திருக்கார். அப்போ என் அண்ணன் அவர்கிட்ட போய், "ஏன்ப்பா.. எப்பவும் இவ்வளவு கோபப்படறீங்க? இவ்வளவு திறமையை கொடுத்த ஆண்டவன் உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுமையை தரலையே"ன்னு கேட்டாராம். அதுக்கு அப்பா, "அதனாலதாண்டா 16 எருமைகளை கொடுத்தார்"னு டக்குன்னு சொன்னாராம்.

புண்ணிய காரியங்களே காரணம்
அவருக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை தலைல ஏத்தனதே கிடையாது. அவருக்கு மகனாக பிறந்தேன்னு நினைக்கும்போதும், நம்மை இவ்வளவு பேர் மதிக்கிறார்களே..ன்னு நினைக்கும்போதும் இன்னைக்கும் என் கண்ணுல கண்ணீர்தான் வருது. அவரை இன்னமும் நாம நெனச்சிட்டு இருக்கறதுக்கு காரணம் அவர் செஞ்ச நிறைய புண்ணிய காரியங்கள்தான்" என்கிறார் டாக்டர் ராமசாமி நெகிழ்ச்சியோடு.












Click it and Unblock the Notifications