சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்த முருகனுக்கு திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்துள்ள நிலையில் இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
சென்னை: சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு இன்று திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அனைத்து சிவாலயங்களிலும் இந்த தெய்வீக திருமணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.
அம்மனிடம் வேல் வாங்கிய முருகன்
இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் போது இன்றைக்கும் முருகனுக்கு வியர்க்கிறது என்பது அதிசயம்.
செந்தூரில் சம்ஹாரம்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்தாலும் அது நடக்க வித்தாக உருவானது சிக்கலில் தான். மேலும் "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்ற சொல் வழக்கும் உண்டு. சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக, சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சியை இன்றளவும் காணலாம்.
தவம் செய்த முருகன்
முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, "போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்' என வரம் தந்ததோடு, "உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்' என ஆசி வழங்கினார்.
சூரனை வதைத்த சுப்ரமணியன்
அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார். புராண கதைப்படி சிக்கலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது முருகனுக்கு வியர்வை ஆறாக பெருகியது.
சூரனை வதைத்த சுப்ரமணியன்
அந்த வேலைக் கொண்டு சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன். சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
முருகப்பெருமான் திருமணம்
விழாவில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காலையில் அம்பாள் தவசுக் கோலம் பூணுதல், மாலையில் சுவாமி, அம்பாள் தோள் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு கோயிலில் மேல கோபுரம் அருகே திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் முருகப்பெருமானுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது.
தணிகை மலை முருகன்
முருகத்தலங்களில் கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகன் தணிகை மலைக்கு வந்து வள்ளியை மணம் முடித்தார் என்கிறது புராண கதை. திருத்தணியில் முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது என்பது சிறப்பம்சம்.