திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் - அரோகரா முழக்கமிட்ட பக்தர்கள்
திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை சம்ஹாரம் செய்த முருகப் பெருமானை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Recommended Video

தூத்துக்குடி: கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரம்சம்ஹாரம் இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது.
திருச்செந்தூர் கடற்கரையில் காலை முதலே கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உடன் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருத்தணி தவிர அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இங்குதான் புராண கதைப்படி சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

சூரனை வதம் செய்யும் சுப்ரமணியர்
விழாவில், 6ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு அபிஷேக ஆராதனை
12.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன், மேளவாத்தியம் முழங்க சண்முகவிலாசம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கோயில் முன்புள்ள கடற்கரையில் எழுந்தருளினார். கையில் வைத்திருந்த வேல் கொண்டு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சூரபத்மனோடு ஆக்ரோஷமாக போரிட்டு வதம் செய்தார். மாமரமாக மாறும் சூரபத்மனை இரண்டு துண்டுகளாக பிளந்து வேலாகவும், மயிலாகவும் மாறும் அவனை ஆட்கொண்டார் முருகப்பெருமான்.

பக்தர்கள் கூட்டம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் தங்கி விரதம் கடைபிடிக்கின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

குவியும் பக்தர்கள்
சுப்ரமணியசுவாமி கோவிலிலும், கடற்கரை அருகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலின் அருகினில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா என்று கேட்கத் தோன்றுகிறது. இன்று முழுவதும் விரதம் இருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்து நாளைய தினம் தங்களின் விரதத்தை முடிக்கின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் சூரசம்ஹாரத்தை காண வசதியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் சுமார் 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கந்த சஷ்டி விழா
கந்த சஷ்டி விழா முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. சென்னையில் வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர் கந்தசாமி கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.












Click it and Unblock the Notifications