பருவமழை தீவிரம்... அருவிகளில் கொட்டும் தண்ணீர் - அணைகளில் ஜிவ்வென உயரும் நீர்மட்டம்
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை, குமரி மாவட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கன்னியாகுமரி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பாரிக்கிறது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
கேரளாவில் பருவமழையின் தீவிரத்தால் பாலருவியிலும் தண்ணீர் பரவலாக விழத்தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இரவும் பல்வேறு இடங்களில் சாரல் மழை தூறியது. அணையோர பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 36.2 மி.மீ. மழை பதிவானது.
குளுகுளு காற்று
நாகர்கோவிலில் காலையில் இருந்தே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்தும் வருகிறது. சுசீந்திரம், வழுக்கம்பாறை, சாமித்தோப்பு, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்க்காற்று வீசுகிறது.
திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவியில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
அணைகளில் நீர்மட்டம்
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 9.55 அடியாக இருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 19.70 அடியாக இருக்கிறது. பேச்சிப்பாறை-31, பெருஞ்சாணி-25, சிற்றாறு-1-36.2, சிற்றாறு-2-6.2, ஆணைக் கிடங்கு-4, கோழிப்போர் விளை-6.4, முள்ளங்கினா விளை-6, புத்தன் அணை- 24.8.