பெற்றோர்கள் பங்கேற்ற ‘வாங்க பழகலாம்‘! காரைக்குடி பள்ளி அசத்தல்!
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் சார்பில் “வாங்க பழகலாம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி: இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் சார்பில் "வாங்க பழகலாம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று ஏழாம் வகுப்பு "அ" பிரிவு பெற்றோர்கள் சார்பில் "வாங்க பழகலாம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் சகாய அமலன் தலைமையேற்றார். பெற்றோர் சார்பில் அஞ்சுகம் அனைவரையும் வரவேற்றார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா, உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ். விஜயலட்சுமி, அ. முத்து வேல்ராஜன் மற்றும் மு. கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் சகாய செல்வன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். இந்நிகழ்ச்சியில் ஏழாம் வகுப்பு அ பிரிவு மாணவர்களின் எதிர்கால இலட்சியங்கள் கேட்கப்பட்டு, பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏழாம் வகுப்பு மாணவி ரேஷ்மா, பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி, அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை, பள்ளியின் வளர்ச்சியில் முழு ஈடுபாடு, சிறந்த பள்ளிக்கான விருது, தூய்மைப் பள்ளிக்கான மாநில விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் தலைமையாசிரியரின் சீரிய செயல்களை பற்றி உரையாற்றினார்.
மாணவர்கள் பாட்டு பாடியும், நடனமாடியும், ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடித்தும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கு லெமன் அண்ட் ஸ்பூன், பலூன் விளையாட்டு மற்றும் ஊக்கு கோர்த்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள், பள்ளி பயன்பாட்டிற்காக அலமாரி வழங்கியுள்ளார்கள்.
மேலும் ஆசிரியர்களுக்கான லக்கி கார்னர் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் வகுப்பு ஆசிரியர் திருமதி சித்ரா அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்வு சிற்றுண்டி விருந்துடன் இனிதாக நிறைவுபெற்றது. இந்நிகழ்வு ஆசிரியர் மாணவர் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சிக்களை பெற்றோர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஏழாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் செய்திருந்தார்கள்.