மீடியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் கார்த்திக்கு ரூ.90 லட்சம் லஞ்சம்.. பரபர பின்னணி
சென்னை: ஊடகம் ஒன்றுக்கு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கப்பிரிவு வழங்கிய தகவலின்பேரிலேயே ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.
தொழிலதிபர், இந்திராணி முகர்ஜியின் நிறுவனமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9X மற்றும் 9X Music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது.
இந்த மீடியா நிறுவனத்திற்கான முதலீட்டை 4 கோடி என்ற அளவில் குறைத்துக் காட்டி வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை பெற்றுத்தர அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக ரூ.90 லட்சம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது அமலாக்கத்துறை.

முறைகேடு
இந்த முறைகேடு தொடர்பாகத்தான் இன்று சிபிஐ சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றது. கார்த்தி சிதம்பரத்தின் பெயர் ஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் அடிபட்டது. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுப்பிரமணியன் சாமி
பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி, சமீபத்தில் 7 பக்க கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியிருந்தார். அதில், வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாக வருமான வரித்துறை அறிக்கையளித்துள்ளதை சாமி சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐரோப்பா சொத்து
கார்த்தியின் கம்பெனிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில், சிதம்பரம் அவரது மனைவி நளினி, கார்த்தி அவர் மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் 2008ல் இணைந்து, ஐரோப்பாவின் கேம்ப்ரிட்ஜ் நகரில் சொத்து வாங்கியது தெரியவந்தது.

குற்றச்சாட்டு
இந்த சொத்துக்கள் குறித்த விவரத்தை சிதம்பரம் தனது வேட்புமனுவின்போது எப்போதுமே தெரிவித்தது கிடையாது என்று சாமி தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

பல நிறுவனங்கள்
கார்த்தியின் ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு ஐஎன்எக்ஸ், டியாஜியோ ஸ்காட்லாந்து லிமிட்டட், கர்த்தா குரூப், ஏர்செலர் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பணம் கொடுத்துள்ளதாக சாமி குற்றம்சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications